Sunday, September 19, 2010

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்? - நிஜப்பின்னணி!

 ஈ-மெயில் வழியாக ஜூனியர் விகடன்  இதழின் வட இந்திய செய்தியாளர் ஷப்பி முன்னா அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட கட்டுரை. அதன் நிஜத்தின் அருமை கருதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில், எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி,  மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ.... அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி.... கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான்  “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல!''  என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின் பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.  இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌ இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை.  கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர். …………………………………………………………….
'' நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

  ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக....‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.
       
   ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

 வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன்.

நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு...  என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்த க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து.
 ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

 தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும், அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன். அந்த சிறுவனது  உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை சமாதானப்படுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌  உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழி உணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே! க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம்.

  காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

  இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா,  “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே? ” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே! இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.

   காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்களால் உண்மையையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர், பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

 சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து, த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ முடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

 த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?

  காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மிக  நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.

 கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும். இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் ரவை (Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.  த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி (Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.

  உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்து கொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.
 எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது....  அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது,  இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு. அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.

பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.

சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை,  '' உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம்!'' என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒளிந்து கொண்டான். என‌து  அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன்,  ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவர்களிலும் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் ஆங்கில‌த்தில் அவ‌னுக்குத் தெரியும். இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.

பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர்... துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட, ‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

 காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு கட்சிதான், PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும்.

இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா? அதற்கு அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார், '' நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன்'' என்று! இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?

  க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால்.... காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர் மக்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.

 காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.

 1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ.... அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக (இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.

  என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் இரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியையும் பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவர்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.

ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்)  என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன்.... என்றிருக்கும் போராட்ட‌ நிலையில், என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.

''பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர  ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை.

 இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி, காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி  தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு,  PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும்-  இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.  ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.


 இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ பக்திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.

 இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை!

- தமிழில்: ப.நற்றமிழன்

Sunday, September 12, 2010

''தலித்கள் தமிழர் இல்லையா?'' ஈழத்தில் ஒரு சாதீய வேதனை! - கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் குமுறல்!

இன்று வட கிழக்கு மாகாண மனித வளத்தில் பெண்களது விழுக்காடு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலித்துகளது விழுக்காடு அதிகரித்துள்ளது ஆனால் தமிழ்க் கட்சிகளது தேர்தற் பிரதிநிதித்துவத்தில் இந்த மாற்றங்கள் ஒரு வகையிலும் பிரதிபலிக்கவில்லை. இந்தகைய சமூக அநீதிகள் களையப்பட வேண்டும்.


அண்மையில் வவுனியா நகரசுத்தித் தொழிலாளர்கள், இறந்து போன தங்களது சக தொழிலாளிக்கு நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் ஒழுங்கு செய்தார்கள். அதைச் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்திச் சில அதிகாரிகள் தடுத்துள்ளனர். இது பற்றி மேயரிடம் முறையிடச் சென்றபோது மேயரும் சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்தி அனுப்பியுள்ளார். இத்தனை மிருகத்தனமான அந்த நகர மேயர் இனி அம்மணமாகத் திரியலாம். இதைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடதுசாரித் தலைவர்களும் அம்மணமாகத் திரியலாம். இவர்கள் முகத்தில் காறி உமிழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய? இத்தகைய நிலமையே இன்னும் தொடர்கிறது. சாதிவாரி ஏற்றத்தாழ்வின் அடிப்படைகள் தகர்க்கப்பட வேண்டும். தலித்துகள் தமிழ் மக்களில்லையா? தமிழருக்காகக் குரல் கொடுக்கிற புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இதைக் கண்டு கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. இதுபற்றி வெட்கித் தலை குனிகிறேன்.
(நன்றி - எழுத்தாளர் ஷோபாசக்தி)

ஓராயிரம் ஆரியவதிகளும்... ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்.... - அருள் எழிலன்

மருத்துவமனையில் ஆரியவதி

கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும்.

 எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நாம் அப்புறப்படுத்தப் போகிறோம். ஆரியவதி மீது ஏற்றப்பட்ட வர்க்கத் திமிர் ஆணிகளை அகற்றக் கோரும் நமது குரல்கள் வன்னியின் மீது ஏற்றப்பட்ட ஆணிகளை அகற்றக் கோரினால் அதை எங்கள் உள்ளூர் எஜமானர்கள் அனுமதிப்பார்களா?


தென்னிலங்கையின் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆரியவதி வயது 49. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆரியவதி சவுதியில் வீட்டு வேலைக்காகச் செல்கிறார். கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டுச் சென்ற ஆரியவதி இம்மாதம் 21-ஆம் தியதி கொழும்பு திரும்பியிருக்கிறார் உடலில் 23 ஆணிகளுடன். சவுதியில் ரியாத் நகரத்தில் இருந்த எஜமானரின் வீட்டில் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து வீட்டை சுத்தமாக பராமரித்து,உடுதுணி துவைத்து, கார் கழுவி, கக்கூஸ் கழுவி, தரையை துடைத்துப் பளபளப்பாக்கி, என எல்லா வேலைக்காரிகளும் நகர்ப்புற ஆண்டை வீட்டில் என்ன செய்வார்களே அதுவே ஆரியவதிக்கும் நடந்தது. மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெண்களின் வறுமையப் பயன்படுத்திக் கொள்ளும் வளைகுடா எஜமானர்கள் வீட்டுவேலைக்கு, லாய வேலைக்கு, மருத்துவமனை சுத்தப்படுத்தும் வேலைக்கு என்று எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பலான மூன்றாம உலக நாட்டுப் பெண்களின் பாலியல் உரிமைகள் அங்கே பறிக்கப்படுகின்றன. பல நேரங்களில் சில முதிய ஷேக்குகள் இளம் இந்தியச் சிறுமிகளை திருமணம் செய்து கடத்திச் செல்வதையொத்த சித்திரவதைகளும் உண்டு. வறுமை, அந்நிய தேசம், முற்றிலும் புதிய கலாசாரம், பிள்ளைகளை, கணவனை பிரிந்த ஏக்கம் என இதை எல்லாம் விட சென்ற உடனேயே பாஸ்போட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுதல் என எந்த வகையில் நோக்கினாலும் இந்த கொடூர சுரண்டல் வடிவத்திற்கு அதிகம் பலியாவது மூன்றாம் உலகப் பெண்கள்தான். ஆனால் இம்மாதிரியான சித்திரவதைகள் நடப்பது பிழைக்கப் போன அந்நிய தேசத்தில் என்பதால் நமக்கு பதட்டமும் கோபமும் தொற்றிக் கொள்கிறது.

சென்னை, கொழும்பு, மும்பை, பெங்களூர் போன்ற நகர்புறங்களில் எங்கள் கிராமத்துக் குழந்தைகளைக் கொண்டு வந்து எஜமானிகளின் மேனி அழகைப் பேண ஏவல் நாய்களாக வைத்திருக்க வில்லையா? உங்களின் குழந்தை கான்வென்ட் செல்ல எங்கள் குழந்தை புத்தக மூட்டையைச் சுமக்கவில்லையா? இது வேலைக்காரி, இது வேலைக்காரியின் மகள் என்று வெளியில் சென்றால் வித்தியாசம் தெரியும் படி எங்கள் குழந்தைகளின் தலைகள் பரட்டையாக இருக்கும் படி நீங்கள் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆமாம் ஆணியேற்றப்பட்ட ஆரியவதிகளை விட ஆணியேற்றப்பட்டு தப்பிவிட முடியாத படி கொலைக்களத்தில் தொங்கவிடப்பட்டுள்ள ஆரியவதிகள் மீது சாத்தப்பட்டுள்ள ஆணிகள் பிடுங்கப்பட வேண்டுமா இல்லையா? ஆமாம் எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட வேண்டும். அது ஆரியவதியாக இருந்தாலும் வன்னிப் பெண்களாக இருந்தாலும், திருப்பூரில் சுமங்கலித் திட்டத்தில் அடிக்கப்பட்டிருக்கும் பெண்களாக இருந்தாலும் ஆணிகள் எல்லாம் ஒன்றுதான். சில ஆணிகள் ஸ்கேன் செய்தால் தெரிந்து விடுகிறது பல ஆணிகள் ஸ்கேன் செய்தாலும் தெரிவதில்லை. அல்லது சில ஆணிகள் குறித்து நாம் பேசுவதில்லை. ஆணிகளை பேரினவாத அதிகாரம் மறைத்திருக்கிறது.


கடந்த 21-ஆம் தேதி நாடு திரும்பிய ஆரியவதி குறித்த உலுக்கும் கதைகளை எல்லா சிங்கள ஊடகங்களும் முக்கியமாக வெளியிட்டன. பௌத்த பிக்குமார்கள் ஆரியவதிக்கு நடந்ததை நாட்டின் கௌரவப் பிரச்சனையாக்கினார்கள். கொழும்பில் சிங்களர்கள் வீட்டில் மலையாளப் பணிப்பெண்களை வீட்டு வேலைக்கு வைக்கக் கூடாது என்று மலையாளிகளுக்கு எதிராக இயக்கம் எடுத்தவர்களின் வாரிசுகள் ஒரு ஏழை பணிப்பெண்ணுக்காக தெருவுக்கு வந்தார்கள். கண்ணிமையில் எத்தனை ஆணிகள், கையில் எத்தனை ஆணிகள், காலில் எத்தனை ஆணிகள் என்று எண்ணிக்கையை சரியாகவேச் சொல்கிறார்கள். இனி ஆரியவதியின் உடலில் இருந்து எடுக்க முடியாத ஆணிகள் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் அதன் ஒரு பாகம். சவூதி அரேபியத் தூதரகம் முன்னால் போராட்டம். பெண்கள் வீர முழக்கங்களை இட்டார்கள். அவர்களோடு பிக்குமாரும் பெண்ணின் கௌவரத்திற்காக வந்து போராடினார்கள். தூதகரம் மூலமாக எடுத்த முயர்ச்சியில் அந்த எஜமானர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஆரியவதியின் உடலில் ஆணியேற்றியவர் மீதான கைது நடவடிக்கை எங்கே பிறக்கிறது என்றால் ஆரியவதிக்காக உரிமைக்குரல்கள் எழுப்பியதால்தான். இந்த உரிமைக்குரல்கள் எழுப்பப்படாமல் போயிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதோடு இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானில் இருந்தோ பங்களாதேஷில் இருந்தோ சில பத்து ஆரியவதிகளை இறக்கி ஆணியடிப்பது அந்த வர்க்கத்திற்கு ஒன்றும் முடியாத காரியமல்ல. ஆக ஆணிக்கு எதிராக எழுந்த குரல்களை வரவேற்கிற அதே நேரம் வன்னிப் பெண்கள் மீது ஏற்றப்பட்டுள்ள ஆணிகளுக்காக ஏன் எழுவதில்லை. அல்லது அழுவதில்லை என்பதே எனது கேள்வி.

போர் முடிவுக்கு வந்த காலத்தில் இரு யானைக்குட்டிகளுக்காக சிங்கள ஊடகங்கள் அழுததை போர் முடிவுக்கு வந்த காலத்தில் கண்டேன் .தலதாமாளிகையின் பௌத்த மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறு பிராயத்தில் இருந்தே பயிற்சியளித்து வளர்ப்பதற்காக இரு குட்டி யானைகளை பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து தாயிடம் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து விட்டதாக சிங்கள ஊடகங்கள் தலையங்கம் எழுதின.மூன்று வயதைக் கூட கடக்காத பால்குடி மறவாத அந்தக் குட்டிகளுக்காக மிருக ஆர்வலர்கள் கண்ணீர் விட்டார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் குட்டி யானைகளின் உரிமை குறித்துக் கசிந்தார்கள்.தாயின் அரவணைப்பு இல்லாமல் ஏங்கிய அந்த இரண்டு குழந்தைகளும் தாயிடம் சேர்க்கப்பட்டன. போராட்டங்களால் அது சாத்தியமானது பேரினவாதிகளின் மனதை அது கரைத்தது. இந்த யானைக்குட்டிகளிடம் காட்டிய இரக்கம் ஏன் கொழும்பு மனித உரிமை ஆர்வலர்களுக்கு மக்களிடம் இல்லாமல் போனது.

ஆக இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான். அது தன் எல்லையைத் தாண்ட மறுக்கிறது. வடக்கிலும் கிழக்கிலுமாக 89,000 விதவைகள் இருக்கிறார்கள் என்கிறது அரசு. இது ஒரு உத்தேச மதிப்பீடுதான். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைகள் தமிழ் பகுதியில் இருக்கக் கூடும். அவர்களின் பிள்ளைகளை, கணவனை காலம் முழுக்க அவர்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டும், வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் இழந்து விட்டார்கள், அவர்களிடம் எதுவுமே இல்லை. கொலையுண்ட மக்களுக்காகப் பேசுவதா? கொலைகாரர்களை தண்டிக்கக் கோருவதா? அல்லது பாதியில் விட்ட ஈழத்த்திற்காகப் பேசுவதா? என ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இந்த விஷயங்கள் குறித்து பேசுவதையே இன்று கூச்சலாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். ஏதோ வன்னி மக்களை நாமே கொலை செய்து கொன்று புதைத்தது போலவும். அவர்களை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி நாடற்றவர்களாக்கியது நாம்தான் என்பது போலவும் பேசுகிறார்கள் கே.பியில் தொடங்கி தமிழகத்தின் பல முற்போக்கு அறிவு ஜீவிகளும் இதையே வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலரின் அறிவும் அதன் மேதமையும் எவ்வளவு வன்முறையானது, ஆபசாமானது, வக்கிரமானது … என்பதை நான் ஈழ விஷயத்தில்தான் கண்டேன். கருணை, இரக்கம், நெகிழ்சித்தன்மை, இவைகளை தந்திரமான வடிவங்களைக் கொண்டு பின்னி விட முடியும். எச்சரிக்கையாக இல்லாது போனால் நாம் அடைய விரும்பும் கருணை ஒளிவட்டம் நம்மை குருதியில் கை நனைக்கச் செய்து விடும் ஆபத்துக் கொண்டது. பௌத்த மேலாதிக்க சிங்கள பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடாத இவர்கள் போராடும் சக்திகளை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். போராடும் சக்திகளாக தங்களை காட்டிக் கொள்கிற தேசியவாதிகளோ தங்களை சுயபரிசோதனைக்குள்ளாக்கத் தயாரில்லை வெட்டி வீரமரபும், சேர, சோழ, பாண்டிய அபத்தங்களுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. இது அறிவு மேனையைப் போன்ற ஆபத்து நிறைந்தது இல்லை என்றாலும் இந்த அபத்தத்தை வைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் செய்ய முடியாது. என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. திராவிட இயக்க மரபு உருவாக்கி வைத்த இந்த எதுகை, மோனை வாய்ச்சவடால்கள் மக்களுக்கு எவ்வகையிலாவது பயன்படுமா? மக்கள் சேர,சோழ, பாண்டியர்கள் இல்லையப்பா……..அவர்கள் பஞ்சைப் பாரரிகள்………..அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் அலைகிறவர்கள். இந்த மேன்மைகள் எதுவும் அவர்களின் பசியை ஆற்றாது. வன்னி மக்களின் பசியையும்தான்.

காணிகள் எல்லாவற்றையும் பேரினவாதிகள் பிடுங்கிக் கொண்டார்கள், கிராம சிறுதெய்வக் கோவில்களும், இந்துக் கோவில்களும், மசூதிகளும் பௌத்த விஹாரைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் வேர் விட்ட இந்துப் பாசிசம் சிறுபான்மை மக்களை அடையாள அழிப்புச் செய்து இந்து, இந்திய மயமாக்குகிறதோ அதுவேதான் இலங்கையிலும் அங்கே தமிழர்கள்.,அ ல்லது இந்துக்கள். அந்தப் பிரச்சனை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமானதல்ல தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமானதுதான். ஆனால் அந்த இன முரண் வடிவத்தை இன்று மடைமாற்றம் செய்து மத வடிவம் கொடுக்கிறார்கள் பௌத்த பிக்குகள். எப்படி இந்தியா காஷ்மீரிகளின் விடுதலை உணர்வை முஸ்லீம் திவீரவாதிகளின் கோரிக்கையான மாற்றி காஷ்மீரில் உள்ள பாண்டிட்களை தூண்டி விட்டு இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாற்றுகிறதோ அப்படி, இந்தியாவில் இந்துப் பாசிசம் செய்யும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. சிலாபம் முன்னேஸ்வரி ஆலைய காளி வழிபாட்டில் பலிகொடுப்பதற்கு எதிராக கொதிக்கும் பௌத்த பிக்குகளின் மிருகங்கள் மீதான கருணையை ஒத்ததுதான் எல்லாம். அவர்கள் மிருகங்களிடம் கருணை காட்டுவார்கள். ஆனால் மனித மாமிசம் கேட்பார்கள். அதுவும் தமிழ் ரத்தமாக இருந்தால் விரும்பு உண்பார்கள். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான குணதாஸ அமரசேகர ” தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் . எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது ” என்று எச்சரிக்கை விடுதுள்ளார். இந்த எச்சரிக்கை இந்துக்களுக்கானது என்று முஸ்லீம்கள் ஒதுங்கலாம். முஸ்லீம்களுக்கானது என்று இந்துக்கள் ஒதுங்கலாம். இரண்டும் இல்லை மலையக மக்களுக்கானது என்று நினைக்கலாம். அதுவல்ல தீவில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவெல்லாம் உண்டோ அது அத்தனைக்கும் எதிரானதுதான் இன்றைய பெரும்பான்மை சிங்களப் பேரினவாதம். இன்று வடக்கில் தமிழ் மக்களுக்கு நடப்பது நாளை கிழக்கில் சிறுபான்மை முஸ்லீமகளுக்கு நடக்கும். இதற்கு நாம் அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த காலக் கசப்புகளுக்காக வன்னி மக்களுக்காக நாம் பேசாது போனால் நாளை கிழக்கு முஸ்லீம்களுக்காக பேச எவரும் இல்லாமல் போகக் கூடும். அல்லது எதிர்ப்பை உடைக்கிற தந்திரம் அங்கும் கையாளப்படும். பேசுவதும் போராடுவதும், குரல் கொடுப்பதும்தான் நாம் வன்னி மக்களுக்குச் செய்கிற நன்மை .நிவாரணம் செய்கிற அதே நேரம் படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தப் பிராந்தியத்தில் இந்தியா விரிவு படுத்தும் மத்திய இந்திய பழங்குடிகள் கொலை பற்றி பேசுகிற நாம் வன்னிப் படுகொலைகளுக்காகப் பேச வேண்டும். நீங்கள் கொடுக்கிற நிவாரணங்கள் முக்கியமல்ல அந்த மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்கவும், அந்த நிலத்தில் சகல சிவில் உரிமைகளைப் பேணும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆரியவதிகளுக்காவும், குட்டியானைகளுக்காகவும் பேசுகிறவர்கள் இதற்காகவும் பேச வேண்டும். ஏனென்றால் நிலங்களை மக்களிடம் இருந்து பிடுங்கி விட்டு மனித உரிமை பேசுவதும், நிவாரணம் பற்றிப் பேசுவதும் பிணத்தின் வாயில் தடவுகிற நெய் போன்றதுதான்.


Monday, August 30, 2010

சமசீர் கல்வி மட்டும் போதுமா? - தமிழ்மகன்

சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்து சாமானியர்களின் காதிலும் தேன் வார்த்திருக்கிறது தமிழக அரசு. மிக்க மகிழ்ச்சி.  ஆனால், சமச்சீர் கல்வி என்பது பள்ளிக்கூடங்கள் வரை தனது வேலையை முடித்துக்கொண்டால் போதுமா? 


உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும்....  நேரடியாக ஊதியம் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் தனது சீர்திருத்தத்தை காட்ட வேண்டாமா?

உயர்கல்விக்கு உயரம் எது?

அறிவியலையோ கலையையோ எடுத்து படிக்கும் ஒரு தமிழ்மகன், இளங்கலை மூன்று வருடங்கள் முடித்து, பின் முதுகலை இரண்டு வருடங்கள் படித்து,  அதற்கும் மேலும் எம்.பில்....  பி.ஹெச்.டி. என்று சிலபல வருடங்களை எதிர்கொள்கின்றனர். இதில், (சுமார் ஐந்து வருடங்கள் வரை) எம்.பில் வரை படித்தவர்களுக்கு மட்டுமில்லை,  அந்த துறையின் உச்சமான பி.ஹெச்.டியை முடித்தவர்களுக்கு கூட அரசு வேலை உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை.

அப்படி கிடைத்தால் அது அரசு வேலையே இல்லையே!

சரி, அரசு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்காவது தனியார் கல்லூரிகளிலாவது வேலைக்கு சேர்ந்து எம்.பில். பட்டதாரிகள் தங்கள் வயிற்றை கழுவலாம் என்று நினைத்தால், அதற்கும் ''பி.ஹெச்.டி. முடித்தால்தான் இனி அரசு விரிவுரையாளர் வேலை'' என்று உத்தரவிட்டு விட்டது உயர்கல்வித்துறை. ஒரு ஐந்து வருடம் ஒரு தமிழ்மகன் தனியார் (பெரும்பாலும்) கல்லூரியில் ஏகப்பட்ட கட்டணங்களோடு தன் படிப்பை முடித்துவிட்டு வருவது இந்த காலத்தில் அவ்வளவு சுலபமான காரியமா என்ன? இந்த கால கட்டத்திற்குள் அவனுக்கு பின்னிருக்கும் குடும்பத்தினர் எத்தனை கடன்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்! அதற்கும் மேலே அவன் தன் கனவான விரிவுரை பணிக்கு போக, பி.ஹெச்.டி. படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆகும் செலவு என்ன கொஞ்சமா? நஞ்சமா?

பொறியில் சிக்கிய இளைஞர்கள்!

இதுதான், இப்படி என்றால் ஐந்து வருடங்கள் சொத்துபத்தை எல்லாம் அடகுவைத்து பொறியியல் படிக்கும் இளைஞர்களை முழுக்க முழுக்க தனியாருக்கே தாரை வார்த்துவிட்டது தமிழக அரசு. அவர்களுக்கென்று எத்தனை வேலைவாய்ப்புகளை அரசு தன் கையில் வைத்திருக்கிறது? அவர்களுக்கான கம்பனிகள் அனைத்தும் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும்- அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலுமே இருக்க.... உயிரை கொடுத்து பிள்ளைகள் வளர்த்து அவர்களை உலகு நாடுகளுக்கு விற்ற கதை ஆகிவிட்டது பொறியியல் பிள்ளைகளின் கதை. கல்லூரி படிப்பை முடித்தவுடனே அவர்கள் எல்லோருமே தலைநகரை நோக்கி படையெடுக்க திக்கித் திணறுகிறது தலைநகர். வருபவர்களையும் அந்த கோர்ஸ் படித்தாயா? இந்த கோர்ஸ் படித்தாயா? என்று பல 'ஆயா?' கேள்விகள் கேட்பதில் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள்! அதிலும் தட்டு தடுமாறி வேலை கிடைப்பவர்களின் சம்பளம் சென்னையின் பெருநகரப் பசிக்கே சரியாகி விடுகிறது. இந்த நிலையில் எந்தக்காலத்தில் சென்னையில் வீடுகட்டி! வாசல்கட்டி! தற்போது, எத்தனை பொறியியல் இளைஞர்கள் சென்னையில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் வேதனைப்படுகிறார்கள் தெரியுமா?

ஆடம்பர வாழ்க்கையில் ஆசிரியர்கள்!

சரி இன்றைய நிலையில் எந்த படிப்பு படித்தால் அதிவிரைவில் செட்டில் ஆகலாம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்கிறார்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பு படியுங்கள் என்று!
1 . பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா? சாதியை பொருத்து அரசு சீட்டே கிடைக்கலாம். அப்படி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! அரசு அங்கிகாரம் பெற்றோ, பெறாமலோ எத்தனையோ பயிற்சி பள்ளிகள் தமிழகம் முழுவதும் திறந்து கிடக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து பயின்றால் போதும். இரண்டே வருட முடிவில் நீங்கள் ஆசிரியர். எப்படியும் ஐந்து வருட முடிவில் அரசுப்பணி. இடையில் எங்கும் வேலை தேடி நாய்பேயாக அலைய வேண்டாம். வேலை வீடு தேடியே வரும்.
2 . எடுத்தவுடனேயே பதினெட்டு ஆயிரங்களுக்கு மேல் சம்பளம். அரசின் இதர படிகள். ஓய்வு ஊதியம் உள்பட ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்களில் தெரிய ஆரம்பித்துவிடும். அதிலும், கலைஞர் மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் போதும். மாதமிருமுறை கூட சம்பளப்படி ஏற்ற தயாராகவே இருப்பார்.
3 . இப்போதெல்லாம் ஆசிரியர் படிப்பு படித்த பெண்களை டாக்டருக்கு கூட தர விரும்பவில்லை பெண்ணின் பெற்றோர். ஆசிரியர் பயிற்சி முடித்த ஆண்களாகவே வரன் தேடுகிறார்கள். இந்த ஆசிரியர் தம்பதிகள் இரண்டே வருடங்களில் சொந்தமாக ஆடம்பர மாளிகைகள் எழுப்பி விடுகின்றனர். அதற்கும் மேல் விளையாடும் அரசு காசு வட்டிக்கு புழங்குகிறது. இன்றைய தேதியில் ஒரு ஊரில் அதிகபட்சமாக வாங்கப்படும் மனைகளும், கட்டப்படும் வீடுகளும் அரசு ஆசிரியர்களுடையது. அந்த அரசு பணம் முழுதும் ஆசிரியர்களை நோக்கியே நகர்கிறது.
4 . அரசு தன்பாட்டுக்கு ஆசிரியருக்கான சம்பள விகிதத்தை ஏற்றிக்கொண்டே போவதால் தரமற்ற பல பயிற்சிப்பள்ளிகள் இன்று மாவட்டங்கள் தோறும் பெருகி வருகின்றன. அதில் வகுப்புக்கே செல்லாத மாணவர்களுக்கு கூட தேர்வுகள் நடைபெற்று சான்றிதழ்கள் கிடக்கின்றன.

அரசு செய்ய வேண்டியது!

1 . இன்று டிகிரி படிப்பு என்பது எல்லா படிப்புக்குமே, வேலைக்குமே அடிப்படை படிப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், மிக புனிதமான பணியாக பார்க்கப்படும் ஆசிரியர் பணிக்கு ஒரு டிகிரி கூட படிக்காதவர்களை நேரடியாக பயிற்சிக்கு அனுமதிப்பது என்பது கேலிக்கூத்தானது. இது, வாழ்க்கையில் சீக்கிரம் முதல்வனாக 
ஆசைப்படும் சில சோம்பேறிகளுக்கான குறுக்கு வழியாகவே பார்க்கப்படுகிறது.
2 . விதிவிலக்காக, ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை மட்டும், சாதி பாகுபாடு பார்க்காமல் அவர்கள் விரும்பினால் அரசு நேரடியாக ஆசிரிய பயிற்சிக்கு அனுமதிக்கலாம். அதற்கு கீழான மதிப்பெண் பெற்ற மாணவர்களை டிகிரி படிப்புக்கு பின்னரே பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.
3 . தரமற்ற பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகாரத்தை அரசு உடனே நீக்க வேண்டும். இதனால் தரமற்ற ஆசிரியர்கள் உருவாவதை தடுக்க வேண்டும். இன்று சமச்சீர் கல்வி புகுத்தப்படும் வேளையில் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையிலான திறமையான ஆசிரியர்களை அரசு உருவாக்க வேண்டும்.

வாக்குகளுக்காக ஒரு இனத்தை மட்டுமே ஊட்டி வளர்ப்பது தலைவனுக்கு அழகன்று. அதேபோல், ஒரு பிள்ளையின் கண்ணில் வெண்ணையையும், இன்னொரு பிள்ளையின் கண்ணில் விஷத்தையும் வைப்பது தாய்க்கும் அழகன்று.
மக்களை ஆளும் முதல்வன் என்பவன் தான் சார்ந்த திரை உலகுக்கும்- தேர்தல் அதிகாரியாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு மட்டும் பாச தலைவனாக இருந்தால் போதாது. எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஆக, சமச்சீர் கல்வி மட்டும் போதாது. சமச்சீர் சமுதாயமும் வேண்டும்!