Monday, August 30, 2010

சமசீர் கல்வி மட்டும் போதுமா? - தமிழ்மகன்

சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்து சாமானியர்களின் காதிலும் தேன் வார்த்திருக்கிறது தமிழக அரசு. மிக்க மகிழ்ச்சி.  ஆனால், சமச்சீர் கல்வி என்பது பள்ளிக்கூடங்கள் வரை தனது வேலையை முடித்துக்கொண்டால் போதுமா? 


உயர்கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும்....  நேரடியாக ஊதியம் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் தனது சீர்திருத்தத்தை காட்ட வேண்டாமா?

உயர்கல்விக்கு உயரம் எது?

அறிவியலையோ கலையையோ எடுத்து படிக்கும் ஒரு தமிழ்மகன், இளங்கலை மூன்று வருடங்கள் முடித்து, பின் முதுகலை இரண்டு வருடங்கள் படித்து,  அதற்கும் மேலும் எம்.பில்....  பி.ஹெச்.டி. என்று சிலபல வருடங்களை எதிர்கொள்கின்றனர். இதில், (சுமார் ஐந்து வருடங்கள் வரை) எம்.பில் வரை படித்தவர்களுக்கு மட்டுமில்லை,  அந்த துறையின் உச்சமான பி.ஹெச்.டியை முடித்தவர்களுக்கு கூட அரசு வேலை உடனே கிடைக்கிறதா என்றால் இல்லை.

அப்படி கிடைத்தால் அது அரசு வேலையே இல்லையே!

சரி, அரசு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்காவது தனியார் கல்லூரிகளிலாவது வேலைக்கு சேர்ந்து எம்.பில். பட்டதாரிகள் தங்கள் வயிற்றை கழுவலாம் என்று நினைத்தால், அதற்கும் ''பி.ஹெச்.டி. முடித்தால்தான் இனி அரசு விரிவுரையாளர் வேலை'' என்று உத்தரவிட்டு விட்டது உயர்கல்வித்துறை. ஒரு ஐந்து வருடம் ஒரு தமிழ்மகன் தனியார் (பெரும்பாலும்) கல்லூரியில் ஏகப்பட்ட கட்டணங்களோடு தன் படிப்பை முடித்துவிட்டு வருவது இந்த காலத்தில் அவ்வளவு சுலபமான காரியமா என்ன? இந்த கால கட்டத்திற்குள் அவனுக்கு பின்னிருக்கும் குடும்பத்தினர் எத்தனை கடன்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்! அதற்கும் மேலே அவன் தன் கனவான விரிவுரை பணிக்கு போக, பி.ஹெச்.டி. படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆகும் செலவு என்ன கொஞ்சமா? நஞ்சமா?

பொறியில் சிக்கிய இளைஞர்கள்!

இதுதான், இப்படி என்றால் ஐந்து வருடங்கள் சொத்துபத்தை எல்லாம் அடகுவைத்து பொறியியல் படிக்கும் இளைஞர்களை முழுக்க முழுக்க தனியாருக்கே தாரை வார்த்துவிட்டது தமிழக அரசு. அவர்களுக்கென்று எத்தனை வேலைவாய்ப்புகளை அரசு தன் கையில் வைத்திருக்கிறது? அவர்களுக்கான கம்பனிகள் அனைத்தும் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும்- அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலுமே இருக்க.... உயிரை கொடுத்து பிள்ளைகள் வளர்த்து அவர்களை உலகு நாடுகளுக்கு விற்ற கதை ஆகிவிட்டது பொறியியல் பிள்ளைகளின் கதை. கல்லூரி படிப்பை முடித்தவுடனே அவர்கள் எல்லோருமே தலைநகரை நோக்கி படையெடுக்க திக்கித் திணறுகிறது தலைநகர். வருபவர்களையும் அந்த கோர்ஸ் படித்தாயா? இந்த கோர்ஸ் படித்தாயா? என்று பல 'ஆயா?' கேள்விகள் கேட்பதில் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள்! அதிலும் தட்டு தடுமாறி வேலை கிடைப்பவர்களின் சம்பளம் சென்னையின் பெருநகரப் பசிக்கே சரியாகி விடுகிறது. இந்த நிலையில் எந்தக்காலத்தில் சென்னையில் வீடுகட்டி! வாசல்கட்டி! தற்போது, எத்தனை பொறியியல் இளைஞர்கள் சென்னையில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் வேதனைப்படுகிறார்கள் தெரியுமா?

ஆடம்பர வாழ்க்கையில் ஆசிரியர்கள்!

சரி இன்றைய நிலையில் எந்த படிப்பு படித்தால் அதிவிரைவில் செட்டில் ஆகலாம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்கிறார்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பு படியுங்கள் என்று!
1 . பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா? சாதியை பொருத்து அரசு சீட்டே கிடைக்கலாம். அப்படி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! அரசு அங்கிகாரம் பெற்றோ, பெறாமலோ எத்தனையோ பயிற்சி பள்ளிகள் தமிழகம் முழுவதும் திறந்து கிடக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து பயின்றால் போதும். இரண்டே வருட முடிவில் நீங்கள் ஆசிரியர். எப்படியும் ஐந்து வருட முடிவில் அரசுப்பணி. இடையில் எங்கும் வேலை தேடி நாய்பேயாக அலைய வேண்டாம். வேலை வீடு தேடியே வரும்.
2 . எடுத்தவுடனேயே பதினெட்டு ஆயிரங்களுக்கு மேல் சம்பளம். அரசின் இதர படிகள். ஓய்வு ஊதியம் உள்பட ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கண்களில் தெரிய ஆரம்பித்துவிடும். அதிலும், கலைஞர் மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் போதும். மாதமிருமுறை கூட சம்பளப்படி ஏற்ற தயாராகவே இருப்பார்.
3 . இப்போதெல்லாம் ஆசிரியர் படிப்பு படித்த பெண்களை டாக்டருக்கு கூட தர விரும்பவில்லை பெண்ணின் பெற்றோர். ஆசிரியர் பயிற்சி முடித்த ஆண்களாகவே வரன் தேடுகிறார்கள். இந்த ஆசிரியர் தம்பதிகள் இரண்டே வருடங்களில் சொந்தமாக ஆடம்பர மாளிகைகள் எழுப்பி விடுகின்றனர். அதற்கும் மேல் விளையாடும் அரசு காசு வட்டிக்கு புழங்குகிறது. இன்றைய தேதியில் ஒரு ஊரில் அதிகபட்சமாக வாங்கப்படும் மனைகளும், கட்டப்படும் வீடுகளும் அரசு ஆசிரியர்களுடையது. அந்த அரசு பணம் முழுதும் ஆசிரியர்களை நோக்கியே நகர்கிறது.
4 . அரசு தன்பாட்டுக்கு ஆசிரியருக்கான சம்பள விகிதத்தை ஏற்றிக்கொண்டே போவதால் தரமற்ற பல பயிற்சிப்பள்ளிகள் இன்று மாவட்டங்கள் தோறும் பெருகி வருகின்றன. அதில் வகுப்புக்கே செல்லாத மாணவர்களுக்கு கூட தேர்வுகள் நடைபெற்று சான்றிதழ்கள் கிடக்கின்றன.

அரசு செய்ய வேண்டியது!

1 . இன்று டிகிரி படிப்பு என்பது எல்லா படிப்புக்குமே, வேலைக்குமே அடிப்படை படிப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், மிக புனிதமான பணியாக பார்க்கப்படும் ஆசிரியர் பணிக்கு ஒரு டிகிரி கூட படிக்காதவர்களை நேரடியாக பயிற்சிக்கு அனுமதிப்பது என்பது கேலிக்கூத்தானது. இது, வாழ்க்கையில் சீக்கிரம் முதல்வனாக 
ஆசைப்படும் சில சோம்பேறிகளுக்கான குறுக்கு வழியாகவே பார்க்கப்படுகிறது.
2 . விதிவிலக்காக, ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை மட்டும், சாதி பாகுபாடு பார்க்காமல் அவர்கள் விரும்பினால் அரசு நேரடியாக ஆசிரிய பயிற்சிக்கு அனுமதிக்கலாம். அதற்கு கீழான மதிப்பெண் பெற்ற மாணவர்களை டிகிரி படிப்புக்கு பின்னரே பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.
3 . தரமற்ற பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகாரத்தை அரசு உடனே நீக்க வேண்டும். இதனால் தரமற்ற ஆசிரியர்கள் உருவாவதை தடுக்க வேண்டும். இன்று சமச்சீர் கல்வி புகுத்தப்படும் வேளையில் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையிலான திறமையான ஆசிரியர்களை அரசு உருவாக்க வேண்டும்.

வாக்குகளுக்காக ஒரு இனத்தை மட்டுமே ஊட்டி வளர்ப்பது தலைவனுக்கு அழகன்று. அதேபோல், ஒரு பிள்ளையின் கண்ணில் வெண்ணையையும், இன்னொரு பிள்ளையின் கண்ணில் விஷத்தையும் வைப்பது தாய்க்கும் அழகன்று.
மக்களை ஆளும் முதல்வன் என்பவன் தான் சார்ந்த திரை உலகுக்கும்- தேர்தல் அதிகாரியாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு மட்டும் பாச தலைவனாக இருந்தால் போதாது. எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஆக, சமச்சீர் கல்வி மட்டும் போதாது. சமச்சீர் சமுதாயமும் வேண்டும்!